காதலிக்க வற்புறுத்தி வாலிபர் செருப்பால் அடித்ததால் பள்ளி ஆசிரியை தற்கொலை!!
திருவெண்ணைநல்லூர் அருகே சித்தலிங்கமடம் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன், விவசாயி. இவரது மகள் இந்திராகாந்தி (வயது 26). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார்.
இதற்கிடையே இந்திராகாந்தி பள்ளிக்கு நடந்து செல்லும்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவர் அடிக்கடி இந்திராகாந்தியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால் இந்திரா காந்தி மறுத்து வந்தார். தொடர்ந்து மணிகண்டன் இதுபோன்று டார்ச்சர் செய்ததால் கடந்த சில நாட்களாக இந்திராகாந்தி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து இந்திராகாந்தி வெளியே சென்றபோது அவரை மணிகண்டன் வழிமறித்து மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். ஆனால் இந்திராகாந்தி இதற்கு மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் இந்திரா காந்தியை செருப்பால் தாக்கினார். இதனால் இந்திராகாந்தி அவமானம் அடைந்தார்.
நேற்று முன்தினம் மாலை தனது பெற்றோரிடம் காட்டு பகுதிக்கு சென்று விறகு எடுத்து வருவதாக கூறி சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எங்கும் இந்திராகாந்தி இல்லை. இந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள கவுண்டர் கால்வாய் என்ற இடத்தில் இந்திராகாந்தி பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே விஷ பாட்டில் கிடந்தது.
இதுகுறித்து இந்திரா காந்தியின் தந்தை கிருஷ்ணன் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் இந்திராகாந்தியை காதலிக்க வலியுறுத்தி தொல்லை கொடுத்து அவரை மணிகண்டன் செருப்பால் தாக்கியதாகவும், இதனால் அவமானத்தில் தனது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.
இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இந்திரா காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating