விடுதிக்குள் அத்து மீறி நுழைந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்!!
உத்தர பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத வாலிபர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்ராம்பூரின் தெகத் பகுதியில் மாணவிகள் தங்கி படித்து வரும் உறைவிடப் பள்ளியின் விடுதி ஒன்று உள்ளது. நேற்றிரவு அந்த விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபன் ஒருவன் அங்கு தங்கியிருக்கும் மாணவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தமிடவே, விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் விரைந்து வந்து அந்த வாலிபனை அடித்து உதைத்தனர்.
பதிலுக்கு அந்த வாலிபனும் தாக்கவே 2 விடுதி மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டது. மாணவிகளை தாக்கிய அந்த வாலிபன் தப்பி ஓடியதையடுத்து, விடுதியின் நுழைவு வாயிலுக்கு வந்த மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுதியில் பாதுகாப்பு இல்லாததால் தங்களின் வீட்டிற்குச் செல்ல இருப்பதாகக் கூறிய மாணவிகள் இந்த சம்பவத்திற்கு விடுதியில் உள்ள அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், விடுதி நிர்வாகி ஷிவ் சரண், மற்றும் வார்டன் மோனிகா இருவரையும் விடுதியை கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்த விசாரணையை மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் மற்றும் வட்டார அலுவலர் மேற்கொள்வதாகவும், மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் கேசவ்தாஸ் தெரிவித்துள்ளார்.
Average Rating