அரை நிர்வாண பெண்களுடன் கிருஷ்ணரின் படம்: ஓவியருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!!
தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய படங்களை வரைந்து கண்காட்சியில் வைத்த அசாம் ஓவியக் கல்லூரி மாணவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது.
அசாம் மாநில தலைநகரான கவுகாத்தியில் சமீபத்தில் ஒரு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு ஓவியர்களின் கைவண்ணம் காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதில் கவுகாத்தி ஓவியக் கல்லூரியில் பயின்றுவரும் கோல்பாரா மாவட்டத்தை சேர்ந்த அக்ரம் ஹுசேன் வரைந்திருந்த சில ஓவியங்கள் பலரது ஆட்சேபத்துக்குள்ளானது. இந்திய சுதந்திரக் கொடி சுருட்டி வைக்கப்பட்டுள்ளது போலவும் அதன் பின்னணியில் மது பாட்டில்கள் உள்ளிட்ட ஆட்சேபகரமான பொருட்கள் குவிந்திருப்பது போன்றும் ஒரு ஓவியம் வைக்கப்பட்டிருந்தது.
மற்றொரு ஓவியத்தில் அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் பெண்களுடன் கிருஷ்ணர் உள்ளது போல் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களை கண்ட தேசப்பற்றாளர்கள் கொதிப்படைந்தனர். மாநில அளவில் நடைபெறும் ஒரு ஓவியக் கண்காட்சியில் இப்படிப்பட்ட படங்கள் இடம்பெற அனுமதித்தது ஏன்? என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், அசாமில் இயங்கிவரும் அனைத்திந்திய தேசபக்தர்கள் அமைப்பு இச்சம்பவத்துக்கு இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
படைப்பு சுதந்திரம் என்ற போர்வையில் தேசியக் கொடி அவமதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய ஓவியங்களின் மூலம் லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட தியாகிகளின் உணர்வுகளை அந்த ஓவியர் புண்படுத்தி விட்டார்.
இந்த செயலை வன்மையாக கண்டிப்பதுடன் மேற்கண்ட படங்களை வரைந்த ஓவியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என இந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Average Rating