புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பெண் நீதிபதிகள்–வக்கீல்கள்!!
புதுக்கோட்டை நகராட்சி 35–வது வார்டு பகுதியில் உள்ள பொது அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இங்கு கோட்டாட்சியர் அலவலகம், தாலுகா அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்பட பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது.
இதையடுத்து மகிளா கோர்ட்டு நீதிபதி பிச்சம்மாள், குற்றவியல் நீதிபதி புஷ்பராணி ஆகியோர் தலைமையில் பெண் வக்கீல்கள் சுமார் 30 பேர் குப்பைகளை அகற்றும் பணியில் இறங்கினர். அந்த பகுதியில் இருந்த குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்தனர். பெண் நீதிபதிகளும், பெண் வக்கீல்களும் துப்புரவு பணியில் இறங்கியதை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இந்த பகுதியை சுத்தம் செய்யும் பணிக்கு பொதுப்பணி துறை சார்பில் 10 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் யாரும் இங்கு வந்து துப்புரவு பணி செய்வதில்லை. இதனால் நீதி மன்ற வளாகம் மற்றும் பிற அரசு அலுவலக பகுதிகளில் குப்பைகள் சேர்ந்துள்ளன. எனவே தான் நீதிபதிகளே துப்புரவு பணியில் இறங்கி உள்ளனர்.
இதன் பிறகாவது துப்புரவு பணியாளர்கள் ஒழுங்காக இங்கு வந்து பணிகள் செய்ய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Average Rating