உ.பி.,யில் இந்துக்கள் 800 பேர் முஸ்லீம்களாக மதமாற்றம்!!
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் அதிக எண்ணிக்கையில் முஸ்லீம்கள் உள்ளனர்.
இந்த பகுதியில், வால்மிகி குடும்ப இந்துக்கள் சிறுபான்மையினர்களாக வசித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் ஆக்கிரமித்த அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமித்த நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள் மீது சிவப்பு குறியிடப்பட்டது. உ.பி.மந்திரி அசம்கான் தூண்டுதலால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ராம்பூர் பகுதியில் வசிக்கும் வால்மிகி குடும்ப இந்துக்கள் 800 பேர் முஸ்லீம்களாக மதம் மாறினார்கள். தங்கள் வீடுகள் இடிக்கப்படாமல் இருப்பதற்காகவே அவர்கள் முஸ்லீம்களாக மாறியதாக கூறப்படுகிறது.
இதை ராம்பூர் மாவட்ட கலெக்டர் சந்திரபிரகாஷ் திரிபாதி மறுத்துள்ளார். உ.பி.மந்திரி அசம்கானின் செய்தி தொடர்பாளர் பாஷத் அலிகான் இது பற்றி கூறும்போது, ‘அவர்கள் மதம் மாறியதற்கும் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை.
பொது நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் எந்த சமூகத்தாலும் ஏற்க முடியாது. ஏற்கனவே ராம்பூர் பகுதியில் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த பெரும் பாலான முஸ்லீம்கள் அங்கிருந்து அப்புறப் படுத்தப் பட்டுள்ளனர்’ என்றார்.
அந்த பகுதியில் வசிக்கும் பிகிம் அனர்யா என்பவர் மதம் மாறியது குறித்து கூறும் போது, ‘சில தினங்களுக்கு முன்பு நகராட்சி ஊழியர்கள் எங்களை சந்தித்தனர். அப்போது உங்கள் வீடுகளை இடிக்காமல் காப்பாற்ற வேண்டும் என்றால், இங்கு பெரும்பான்மையாக உள்ள முஸ்லீம் மதத்துக்கு நீங்களும் மாறுங்கள். பிரச்சினை வராது என்று அறிவுரை கூறினார்கள். அதனால்தான் மதம் மாறினோம்’ என்றார்.
அவினேஷ் தவான் என்பவர் கூறும்போது, ‘கூடுதல் கலெக்டர் எங்கள் பகுதியை நேரில் வந்து பார்த்தார். அப்போது வீடுகளுக்கு எந்த பாதிப்பும் வராது என்று உறுதி கூறினார். ஆனால் அதை நாங்கள் நம்பவில்லை. எழுதிக் கொடுத்தால் தான் நம்ப முடியும். இதனால் தான் முஸ்லீம்களாக மாறினோம்’ என்றார்.
800 பேர் முஸ்லீம்களாக மதம் மாறிய பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
Average Rating