முதல் திருமணத்தை மறைத்து மோசடி: பெண்ணுக்கு 3 ஆண்டு ஜெயில்!!
வந்தவாசி தாலுகா அல்லியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரது மகன் மணவாளன் (வயது 42) விவசாயி. இவருக்கும், ஆரணி தாலுகா முள்ளண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகள் சுமதிக்கும் (35) கடந்த 2007–ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணம் நடந்த ஓராண்டுக்கு பிறகு, சுமதிக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததும், தன்னை ஏமாற்றி 2–வதாக திருமணம் செய்து கொண்டதும் மணவாளனுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் மணவாளன் புகார் அளித்தார். புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், கடந்த 2008–ம் ஆண்டு செய்யாறு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மணவாளன் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி அண்ணாமலை அமர்வு முன்பு இன்று தீர்ப்பு வந்தது. அதில் முதல் திருமணத்தை மறைத்து 2–வது திருமணம் செய்த சுமதிக்கு, 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் 3 மாத ஜெயில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி கூறினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுமதியின் பெற்றோர் கணேசன், மங்களலட்சுமி, தரகர் நரசிம்மன் ஆகிய 3 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
Average Rating