கோவையில் 2 வாரத்தில் 20 பெண்களிடம் கைவரிசை: நகைபறிப்பு கொள்ளையர்கள் அட்டகாசம்!!
கோவையில் கடந்த சில நாட்களாக பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக சாலையில் நடந்து செல்லும் பெண்களை தாக்கியும், தனியாக செல்லும் பெண்களிடம் முகவரி கேட்பது போலவும், போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு அறிவுரை கூறுவது போல நடித்தும் மர்ம நபர்கள் நகை பறித்து செல்கின்றனர்.
கோவை மாநகரத்தில் நேற்று ஒரே நாளில் 3 பெண்களிடம் 22½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதுபோல, புறநகர் பகுதிகளில் நகைபறிப்பு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.
கோவை ராமராமநபுரத்தில் சாலையில் நடந்த சென்ற சாந்தா, கணபதி லெனின் நகரை சேர்ந்த ராஜேசுவரி ஆகியோரிடம் போலீஸ் போல நடித்து 15 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளனர். இதுபோல வடவள்ளி புதுதில்லை நகரை சேர்ந்த சுப்புலெட்சுமி(68) என்பவர் நேற்று அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சுப்புலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கோவையில் சமீப காலமாக நகைபறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 20–க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகைகள் பறிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவங்களில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
கொள்ளையர்கள் திட்டம் தீட்டி, நகை பறித்த உடன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விடுகின்றனர். எனவே போலீசார் தனிப்படைகள் அமைத்து நகை பறிப்பு குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Average Rating