கருங்கல் போலீஸ் நிலையத்தில் இளைஞர் காவல்படை வீரருடன் இளம்பெண் தஞ்சம்!!
கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோட்டை சேர்ந்தவர் ஞானபிரகாசம். இவரது மகள் ஜெனிபா கண்மணி (வயது 25). டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
இவரும், சிதறால் பகுதியை சேர்ந்த பிரமோத் ராஜ் (27) என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பிரமோத்ராஜ் இளைஞர் காவல்படையில் பணியாற்றி வருகிறார்.
2 பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலை ஏற்க ஜெனிபாவின் குடும்பத்தினர் மறுத்தனர். மேலும் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து அவருக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடத்தினர். திருமண ஏற்பாடுகளிலும் ஜெனிபாவின் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஜெனிபாவின் வீட்டுக்கு காரில் சென்ற பிரமோத்ராஜ் அவரை தன்னுடன் அழைத்துச் சென்றார். ஜெனிபா காரில் ஏறிச்செல்வதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் ஏறிச்சென்ற காரை துரத்தினர். ஆனால் காரை அவர்களால் பிடிக்க முடியவில்லை.
இதுபற்றி ஜெனிபாவின் தந்தை ஞானபிரகாம் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் ஜெனிபா மாயமாகி விட்டதாகவும், அவரை மீட்டு தரும்படியும் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் ஜெனிபாவை தேடி வந்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்து ஜெனிபாவும், பிரமோத்ராஜூம் நேற்று கருங்கல் போலீஸ்நிலையம் வந்து தஞ்சம் அடைந்தனர். நாங்கள் 2 பேரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பு காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி பாலைக்காவிளையில் உள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களை சேர்த்து வைக்கும்படியும் கூறினர்.
இதையடுத்து போலீசார் 2 பேரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜெனிபாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போலீசாரின் சமரசத்தையும் ஏற்க மறுத்தனர். முடிவில் எங்களுக்கும், ஜெனிபாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஆவேசமாக கூறி விட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்றார்.
ஜெனிபா, பிரமோத்ராஜூடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதனால் போலீசார் காதல் ஜோடியை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
Average Rating