அழகப்பா பல்கலைக்கழகத்தில் காசோலையில் போலி கையெழுத்திட்டு மோசடி செய்த உதவியாளர் கைது!!
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தவர் கணேசன். இவர் பல்கலைக்கழக பதிவாளரிடம் கையெழுத்திற்காக வரும் காசோலை புத்தகத்தில் இருந்து பூர்த்தி செய்யப்படாத ஒரு காசோலையை யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்துக் கொண்டார்.
அந்த காசோலையில் சக்திவேல் என்ற பெயருக்கு ரூ.72 ஆயிரத்தை பூர்த்தி செய்து அதில் பதிவாளர், நிதி அலுவலர் ஆகியோரது போலி ரப்பர் ஸ்டாம்பு மூலம் பதிவு செய்து காசோலையின் பின்புறம் சக்திவேல் என்று அவரே கையெழுத்திட்டுள்ளார். பின்னர் அதனை பல்கலைக்கழகத்தில் தினக்கூலியாக பணியாற்றும் ஒருவர் மூலம் அழகப்பாபுரத்தில் உள்ள ஒரு அரசு வங்கியில் காசோலையினை மாற்றி பணமாக எடுத்துள்ளார்.
சில நாட்கள் கழித்து, பல்கலைக்கழக நிதி அலுவலகத்தில் கணக்கினை சரி பார்த்தபோது ரூ.72 ஆயிரம் மட்டும் குறைந்தது. உடனே பல்கலைக்கழக அதிகாரிகள் அதே அரசு வங்கியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலி காசோலை மூலம் பணம் எடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து, காசோலை மாற்றிய நேரத்தில் வங்கி சி.சி. டிவி கேமராவை கண்காணித்தபோது, அதில் பல்கலைக்கழக தினக்கூலி ஒருவர் பணம் மாற்றியது அதில் பதிவானது. அதை வைத்து சம்பந்தப்பட்ட பணியாளரிடம் விசாரித்த போது, பதிவாளர் அலுவலக உதவியாளர் கணேசன் தான் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பதிவாளர் மாணிக்கவாசகம் அழகப்பாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தேவகி வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தார்.
Average Rating