காளையார்கோவில் அருகே 4–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் கைது!!
காளையார்கோவிலை அடுத்தது பெரியநரிக் கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 4–ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சிவகங்கை மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமியிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் முத்து, ராமச்சந்திரன் மற்றும் ஆலோசகர் டெய்சி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அதில் தலைமை ஆசிரியர் முருகன் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் தலைமறைவானார். தொடர்ந்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
இந்த சம்பவம் குறித்து சிவகங்கை உதவி போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது புகார் கூறப்பட்ட தலைமை ஆசிரியர் முருகன், மேலும் 6 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து தலைமை ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் உறவினர் வீட்டில் இருந்த முருகனை போலீசார் கைது செய்தனர்.
Average Rating