ஆக்ரா நகரில் பொது கழிப்பறையின் செப்டிக் டேங்க் வெடித்து சிதறியதில் 2 பேர் பலி!!
கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் அசுத்த நீரை தேக்கிவைக்கும் செப்டிக் டேங்க் இன்று வெடித்துச் சிதறியதில் இருவர் பலியாகினர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தின் ரகப்கஞ்ச் பகுதியில் ஈத்கா பஸ் நிலையம் அருகே ஒரு பொது கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறையில் இருந்து வெளியாகும் அசுத்த நீர் கழிப்பறையின் அடியில் உள்ள செப்டிக் டேங்கில் தேக்கி வைக்கப்பட்டு, அந்த தொட்டி நிரம்பிய பிறகு லாரிகள் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நெடுநாட்களாக இந்த அசுத்த நீர் வெளியேற்றப்படாததால் இன்று அந்த செப்டிக் டேங்குக்குள் அதிகப்படியான விஷவாயுவின் அழுத்தம் ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த தொட்டி வெடித்து சிதறியது. கழிப்பறையில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக அமர்ந்திருந்த பலர் மலநீரில் விழுந்து தத்தளித்தனர்.
அவர்களில் இருவர் பலியாகினர். ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசாரும், ஆக்ரா நகராட்சி அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.
Average Rating