மாடியில் இருந்து தூக்கி வீசி குழந்தையை கொன்ற தாய்: பரபரப்பு தகவல்கள்!!
ஆஸ்பத்திரி மாடியில் இருந்து தூக்கி வீசி குழந்தையை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
தானே, டோம்பிவிலி பகுதியை சேர்ந்தவர் சுஜாதா. இவருக்கு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், மீண்டும் கர்ப்பமான சுஜாதா கடந்த மாதம் பிரசவத்திற்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுஜாதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. 3 நாட்கள் ஆன நிலையில், சுஜாதாவின் குழந்தை ஆஸ்பத்திரி வளாகத்தில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து ராம்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், சுஜாதா அனுமதிக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரியின் 2–வது மாடியில் இருந்து குழந்தை வெளியே வீசி கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
பிரசவத்தின்போது சுஜாதாவின் தாயும், மாமியாரும் உடன் இருந்து கவனித்து உள்ளனர். இரண்டாவதாக மீண்டும் சுஜாதாவிற்கு பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் அவர்களில் யாராவது குழந்தையை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனால் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
ஆனால் இருவரும் தாங்கள் குழந்தையை கொலை செய்யவில்லை என்று தெரிவித்தனர். இந்தநிலையில், கோர்ட்டில் அனுமதி பெற்று சுஜாதா, அவரது தாய் மற்றும் மாமியார் ஆகிய 3 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்கு சுஜாதாவின் தாய், மாமியார் இருவரும் சம்மதித்தனர். ஆனால் சுஜாதா மறுப்பு தெரிவித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுஜாதாவிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர் தான் குழந்தையை வெளியில் வீசி கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் வருமாறு:–
சுஜாதா முதல் தடவையாக கர்ப்பம் தரித்தபோது அவர் ஆண் குழந்தை பெற்றெடுப்பார் என அவரது கணவர் மிகுந்த ஆவலில் இருந்தார். ஆனால் சுஜாதா பெண் குழந்தை பெற்றெடுத்தார். இதனால் சுஜாதாவின் கணவர் மிகுந்த மனவருத்தம் அடைந்தார்.
அப்போது, அடுத்து நமக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சுஜாதா கணவரை தேற்றினார். இந்தநிலையில் சுஜாதா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் பிரசவத்தின் போது அவருக்கு இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்தது. இதையறிந்ததும் சுஜாதா கடும் அதிர்ச்சி அடைந்தார். மீண்டும் பெண் குழந்தை பெற்றெடுத்ததால் கணவர் தன்னை வெறுத்து விடுவாரோ என பயந்தார்.
இதனாலேயே குழந்தையை கொலை செய்ய துணிந்துள்ளார். சம்பவத்தன்று வார்டில் தனியாக இருந்தபோது அவர் தனது மனதை கல்லாக்கி கொண்டு குழந்தையை தூக்கி வெளியே வீசி கொலை செய்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்தன. இதையடுத்து போலீசார் சுஜாதாவை கைது செய்தனர்.
Average Rating