எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை: கோவை ஜெயில் கைதிகள் வக்கீல்களிடம் கதறல்!!
கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்பு கைதிகள், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறையில் உள்ள கைதிகளில் 3 பேர் தரையில் கொட்டப்பட்ட உணவை சாப்பிடுவது, தனிமைச்சிறையில் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் அமர்ந்திருப்பது, தரையில் தண்ணீர் ஊற்றப்பட்டதால் படுக்க முடியாமல் அவதிப்படுவது போன்ற காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில் சிறையில் சித்ரவதைக்குள்ளான கைதிகள் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நவீன், வேலூரைச் சேர்ந்த அய்யப்பன், சேலத்தை சேர்ந்த தேவராஜ் என்பது தெரியவந்துள்ளது.
இந்த காட்சிகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. பார்த்தசாரதி உத்தரவிட்டார்.
அதன்பேரில் சிறைத்துறை டி.ஐ.ஜி. முகமது அனிபா கோவை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். வாட்ஸ் அப்பில் வெளியான காட்சிகள் குறித்து சிறை சூப்பிரண்டு ஆனந்தனிடம் விசாரித்தார்.
விசாரணைக்குப் பின்னர் டி.ஐ.ஜி. முகமது அனிபா நிருபர்களிடம் கூறும் போது:–
சிறை கைதிகள் சித்ரவதை வாட்ஸ் அப் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கை ஏ.டி.ஜி.பி.க்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
இந்நிலையில் மனித உரிமை ஆர்வலர்களும், வக்கீல்களுமான பன்னீர் செல்வன், தொல்காப்பியன் ஆகியோர் சிறைக்கு சென்று சம்பந்தப்பட்ட 3 கைதிகளிடம் விசாரித்தனர்.
அப்போது கைதிகளின் உடலில் பலத்த காயம் இருப்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் வக்கீல்கள் இருவரும் நிருபர்களிடம் கூறியதாவது:–
வாட்ஸ் அப்பில் வெளியான காட்சிகளில் உள்ள கைதிகளின் உடலில் பலத்த காயம் காணப்படுகிறது. அவர்கள் உடல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளது உறுதியாகிறது. கோவை சிறையில் மனித உரிமை மீறல் நடந்தது இதன் மூலம் அப்பட்டமாக வெளியாகி உள்ளது.
நாங்கள் அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் 3 பேரும் ‘நாங்கள் இங்கிருந்தால் (கோவை சிறையில்) எங்களை கொன்று விடுவார்கள். தயவு செய்து வேறு சிறைக்கு மாற்றி விடுங்கள் என்று கண்ணீர் மல்க கதறினர்.
இந்த 3 கைதிகள் மட்டுமல்லாமல் மேலும் 15 கைதிகள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Average Rating