விழுப்புரத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு வழி தவறி வந்த பள்ளி மாணவன்: ஆட்டோ டிரைவர் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தார்!!
விழுப்புரம் அடுத்த விசிரெட்டிபாளையம், திரெளபதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் கார்த்திக்(13). அப்பகுதியில் உள்ள ராதாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்வு முடிந்ததும் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்சில் பள்ளி மாணவன் கூடுவாஞ்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து இறங்கினார். பின்னர் வழிதெரியாமல் கூடுவாஞ்சேரி ரயில்வே கேட் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் அழுதபடி அலைந்து திரிந்து கொண்டிருந்தார்.
இதனை கண்ட ஆட்டோ டிரைவர் சுரேஷ்குமார் மாணவனை அழைத்து வந்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கத்திடம் ஒப்படைத்தார். இதனையடுத்து மாணவனிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர் கூறுகையில், எனது அப்பா சென்னையில் கூலி வேலை செய்கிறார். அம்மா கூடுவாஞ்சேரியில் உள்ள மாமா வீட்டில் உள்ளார். தேர்வு முடிந்ததும் எனது பாட்டி வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது பாட்டியிடம் அம்மாவை பார்க்க வேண்டும் என்றேன். அதற்கு அவர் விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏற்றி விட்டார். இங்கு உள்ள மாமா வீடு தெரியாமல் அலைந்து திரிந்துகொண்டிருந்தேன் என்றான்.
இதனையடுத்து போலீசார் விழுப்புரம் போலீஸ் மூலம் மாணவனின் உறவினர்களின் செல்போன் எண்களை கண்டுபிடித்து கூடுவாஞ்சேரி மந்தைவெளி தெருவில் உள்ள மாணவனின் மாமா பாபுவுக்கு போன் செய்து தகவல் கூறினர். இதனைதொடர்ந்து பாபுவின் மனைவி எழிலரசியிடம் கார்த்திக்கை கூடுவாஞ்சேரி போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.
Average Rating