சிதம்பரம் அருகே பள்ளி ஆசிரியை கற்பழிப்பு: ஊராட்சி தலைவரின் மகன் கைது!!
சிதம்பரம் அருகே பால்வாத்துண்ணான் கிராமத்தை சேர்ந்தவர் லதா (வயது 22, பெயர் மாற்றப்பட்டுள்ளது), பட்டதாரி. இவர் சிதம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவரும், வேலங்கிப்பட்டு ஊராட்சி தலைவி குப்பம்மாள் மகன் ராஜா என்கிற திருநாவுக்கரசு (வயது 30) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லதாவை ராஜா கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் லதாவுடன் பழகுவதை அவர் தவிர்த்து வந்தார். மேலும் ராஜாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய, அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர்.
இதை அறிந்த லதா, ராஜாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். ஆனால் ராஜா மறுத்துவிட்டார். இதுபற்றி ராஜாவின் குடும்பத்தினரிடம் அவர் நியாயம் கேட்டார். ஆனால் அவருடைய குடும்பத்தினர் அவரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து லதா, சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் ராஜா என்கிற திருநாவுக்கரசு, அவருடைய தாய் குப்பம்மாள், உறவினர்கள் தணிகாசலம், சிவலிங்கம் ஆகிய 4 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குபதிவு செய்தார். இதில் ராஜா, சிவலிங்கம் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Average Rating