விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இன்று மேலும் ஒரு குழந்தை சாவு!!
விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 பச்சிளங் குழந்தைகள் 3 நாட்களில் அடுத்தடுத்து இறந்து போனது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தமிழக சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத் ஆகியோர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் ஆய்வு செய்தனர். மேலும் குழந்தைகள் சாவு காரணம் குறித்து அறிய சென்னை பச்சிளங் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு மருத்துவ குழுவினரை வரவழைத்தனர்.
இந்த குழுவினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முகாமிட்டு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்கி வந்தனர். இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக குழந்தைகள் எதுவும் இறக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திருநாவலூரை சேர்ந்த கமலக்கண்ணன்– கலைத்தென்றல் தம்பதியரின் பிறந்த 16 நாட்களே ஆன பெண் குழந்தை இன்று காலை 10 மணிக்கு திடீரென இறந்து போனது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மற்ற குழந்தைகளின் பெற்றோர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
Average Rating