சிவகிரி அருகே நீச்சல் பழகிய போது 5–ம் வகுப்பு மாணவி கிணற்றில் மூழ்கி பலி!!
ஈரோடு மாவட்டம் சிவகிரி பட்டய தெருவை சேர்ந்தவர் ரகு. இவர் விசைத்தறி புரோக்கராக இருந்து வருகிறார். இவரது மகள் அட்சயா (வயது 11). இவள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் இன்று காலை சிவகிரி அருகே நொச்சிதோட்டம் பகுதியில் அய்யாச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் உறவினர்களுடன் நீச்சல் பழக அட்சயா சென்றாள்.
உறவினர்கள் சிறுமி அட்சயாவுக்கு கிணற்று தண்ணீரில் நீச்சல் அடிக்க சொல்லி கொடுத்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சிறுமி அட்சயா கிணற்றில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கிணற்றில் குதித்து அட்சயாவை தேடினர். ஆனால் அட்சயா கிடைக்கவில்லை.
இதைதொடர்ந்து கொடுமுடி தீயணைப்பு துறையினருக்கும், சிவகிரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
கொடுமுடி தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கிய அட்சயாவை தேடினர். மேலும் அரச்சலூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வாலிபர் ஸ்ரீகாந்தும் கிணற்றில் இறங்கி தேடினார்.
பின்னர் சுமார் ஒருமணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுமி அட்சயாவின் உடல் மீட்கப்பட்டது.
சிறுமி அட்சயாவின் உடலை பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது.
இந்த சம்பவம் பற்றி கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரித்து வருகிறார்.
நீச்சல் பழக சென்ற சிறுமி கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating