உத்தரபிரதேசத்தில் தோழியை திருமணம் செய்த பெண்: பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்!!
உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சோரோன் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பூனம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து ஊரை சேர்ந்த ரேணு என்ற இளம் பெண்ணை பூனம் சந்திக்க நேரிட்டது. அவர்கள் இருவரும் தோழிகளாக மாறினார்கள்.
பூனமும், ரேணுவும் தினமும் சந்தித்து பேசி வந்தனர். நாளடைவில் அவர்களது நட்பு ‘‘லெஸ்பியன்’’ காதலாக மாறியது.
இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனி வீட்டில் குடியேறி வாழ விரும்பினார்கள். அவர்களது இந்த திட்டம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது.
லெஸ்பியன் உறவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இரு குடும்பத்தினரும் பூனம், ரேணுவை பிரிக்க முடிவு செய்தனர். இதனால் பயந்து போன தோழிகள் இருவரும் கடந்த 14–ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். அதை அதிகாரப்பூர்வமாக பதிவும் செய்தனர்.
அவர்கள் திருமணம் செய்து கொண்ட தகவல் அறிந்ததும் பூனம் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ரேணுவை விரட்ட அவர்கள் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் பூனம், ரேணு இருவரும் நேற்று போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அவர்கள் இருவரும் 18 வயதை கடந்தவர்கள் அவர்களை பிரிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து பூனம், ரேணுவின் இரு வீட்டாரும் அடுத்து என்ன செய்வது என்று சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.
Average Rating