புதுச்சேரியில் அரசு ஊழியர் வீட்டில் 84 பவுன் நகை திருட்டு!!
புதுவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள சண்முகா புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 34). காரைக்காலில் உள்ள அரசு கால்நடை பராமரிப்பு துறை ஊழியர்.
கடந்த 17–ந்தேதி வேல்முருகன் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருப்பதி சென்றார். நேற்று அதிகாலையில் திரும்பி வந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
திருப்பதிக்கு செல்லும் முன்பு வேல்முருகன் பாதுகாப்பு கருதி தனது வீட்டில் 3 மின் விசிறிகளின் கோப்பையில் 84 பவுன் நகைகளை மறைத்து வைத்திருந்தார். அந்த நகைகள் மர்ம கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை அறிந்து வேல் முருகன் குடும்பத்தினர் திடுக்கிட்டனர்.
இதுபற்றி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் சூப்பிரண்டு பைரவசாமி அந்த வீட்டை நேரில் பார்வையிட்டார். தனிபடை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டார்.
தனிபடை போலீஸ் விசாரணையில், வேல்முருகன் குடும்பத்தினர் வெளியூர் சென்றதை கொள்ளைகும்பல் நோட்டமிட்டு நகைகளை கொள்ளையடித்திருப்பதை அறிந்தனர். எனவே இது உள்ளூரை சேர்ந்த மர்ம மனிதர்களின் கைவரிசையாக இருக்கலாம் என சந்தேகித்தனர்.
எனவே அந்த பகுதியில் உள்ள ரவுடிகள் மற்றும் சந்தேகப்படும் படியானவர்களின் பெயர் விபரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். இதில் கொள்ளைகும்பல் வேல்முருகன் வீட்டில் சுருட்டிய நகைகளுடன் பக்கத்து ஊர்களான கடலூர், விழுப்புரம், திண்டிவனத்துக்கு தப்பியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
எனவே தனிப்படை போலீசார் மேட்டுப்பாளையம் சப்–இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், குமரவேல், குமார் ஆகியோர் தலைமையில் 3 குழுக்களாக பிரித்து கொள்ளையர்களை பிடிக்க அந்த ஊர்களுக்கு விரைந்துள்ளனர்.
Average Rating