13 வயது சிறுவனை 5 நாட்கள் காவல்நிலையத்தில் சிறைவைத்த கொடூரம்: சங்கிலியால் கட்டிப்போட்ட ஆந்திர காவல்துறை!!
அழுதபடி இருக்கும் 13-வயது சிறுவனை ஆந்திர காவல் நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் செயின் பறித்ததாக வந்த குற்றச்சாட்டில், 13-வயது சிறுவனை பிடித்து 5 நாட்கள் காவல் நிலையத்திலேயே சிறை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவனது காலை சங்கிலியால் பிணைத்து ஜன்னலில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் காட்சிகிளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் “ சம்பவம் நடந்த போது காவல்நிலையத்தில் ஒரே ஒரு காவலர் மட்டுமே இருந்துள்ளார். அவர் சாப்பிடுவதற்கு வெளியே செல்லும் போது சிறுவன் ஓடிவிடாமல் இருப்பதற்காக சங்கிலியால் கட்டி போட்டதாக” தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றி விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
காவல்துறையின் கூற்றுப்படி அந்த சிறுவன் பழந்துணிகளை சேமித்து விற்பவன் என்றும், அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபடுபவன் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் சிறுவனை 5 நாட்கள் காவல் நிலையத்தில் அடைத்துவைத்து மட்டும் அல்லாமல், சங்கிலியால் கட்டிப்போட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அனைத்து சட்டவிதிகளும் மீறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் 20 அப்பாவி தமிழக கூலி தொழிலார்களை சுட்டுக்கொன்ற ஆந்திர காவல்துறையினரிடம் வேறு எதை எதிர்பாக்க முடியும்.
Average Rating