சேலம் அருகே காதலிக்க மறுத்ததால் மாணவியை தீ வைத்து கொளுத்திய வாலிபர் கைது!!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மந்தவெளி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாணவி ஒருவர் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 19–ந்தேதி (ஞாயிற்றுகிழமை) அன்று மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் கார்த்தி என்பவர் அங்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் மாணவி உடலில் தீ பிடித்து எரிந்த நிலையில் வெளியே ஓடி வந்தார். இதனை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் பார்த்தனர். உடனே பொதுமக்கள் விரைந்து சென்று மாணவியின் உடலில் பிடித்த தீயை அணைத்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனக்கு நேர்ந்த கதி குறித்து மாணவி போலீசாரிடம் கூறியிருப்பதாவது:–
நான் பள்ளிக்கு சென்று வரும்போதெல்லாம் கார்த்தி என்னை பின் தொடர்ந்து வருவார். தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். வீட்டில் யாரிடமாவது கூறினால் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் என்று பயந்து நான் யாரிடமும் சொல்லவில்லை.
இந்த நிலையில் கார்த்தியின் பழக்க வழக்கங்கள் சரியில்லை என்பது எனக்கு தெரியவந்தது.
சம்பவத்தன்று கார்த்தி எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் நான் விரக்தி அடைந்தேன்.
உடனே அவரை மிரட்டுவதற்காக மண்எண்ணெயை எடுத்து எனது உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினேன்.
அப்போது ஆத்திரம் அடைந்த கார்த்தி காதலிக்க மறுக்கிறாயா? என கூறி திடீரென என் மீது தீ வைத்து கொளுத்தி விட்டு ஓடிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து ஆத்தூர் போலீசார், வாலிபர் கார்த்தியை கைது செய்தனர்.
Average Rating