திருச்சி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை ஓட்டம்!!
திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அருகே உள்ள காவேரி நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் புனிதா (வயது 24). இவர் சோமரசம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
தினமும் தனது வீட்டில் இருந்து பள்ளி வேனில் பணிக்கு செல்வது வழக்கம். நேற்றும் அதேபோல் காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து பள்ளி வேனில் புனிதா புறப்பட்டார். ஆனால் அவர் பாதி வழியிலேயே வேனில் இருந்து இறங்கியுள்ளார்.
மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் பள்ளிக்கு தொலைபேசியில் விசாரித்துள்ளனர். அப்போதுதான் புனிதா பள்ளிக்கு செல்லாதது தெரிய வந்தது.
இதையடுத்து தனது உறவினர்களுடன் பல்வேறு இடங்களில் தேடியும் புனிதா குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மேலும் புனிதாவின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது.
இதற்கிடையே நேற்று காலை பணிக்கு சென்ற புனிதா வீட்டில் இருந்த அவரது ஆதார் அட்டை, மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் எடுத்து சென்றுள்ளார்.
இதுதொடர்பாக அவரது பெற்றோர் இன்று காலை ஜீயபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாயமான ஆசிரியை புனிதா ஏற்கனவே ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அவரது பெற்றோர் அந்த வாலிபருடனேயே திருமணம் செய்துவைக்க சம்மதித்து உள்ளனர். வருகிற ஜூன் மாதம் அவர்களது திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் ஆசிரியை புனிதா மாயமாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating