வடசேரியில் பிளஸ்–1 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
நாகர்கோவில் வடசேரி பகுதியில் இன்று 17 வயதே ஆன பிளஸ்–1 படித்து வரும் மாணவி ஒருவருக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், இதனை தடுத்து நிறுத்தி அந்த சிறுமியை காப்பாற்ற வேண்டும் எனவும் நாகர்கோவிலில் உள்ள குழந்தைகள் கடத்தல் தடுப்பு மற்றும் மீட்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே சப்–இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் வடசேரிக்கு விரைந்து சென்றனர். அங்கு டெலிபோனில் கிடைத்த தகவல் படி ஒரு சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
போலீசார் திருமண வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து மணமகளின் பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அவர்கள் மணமகளுக்கு திருமண வயது ஆகிவிட்டதாகவும், அவர் விருப்பப்படியே திருமணத்தை நடத்துவதாகவும் கூறினர்.
இதை நம்பாத போலீசார் மணமகளின் வயது சான்றிதழை கேட்ட போது அவருக்கு 17 வயது மட்டுமே ஆகிஇருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மணமேடையில் இருந்த பெண்ணை அழைத்து விசாரித்தபோது அவர் தன்னை கட்டாயப்படுத்தியே இத்திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் சிறுமியின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தனர்.
உடனே சிறுமியின் பெற்றோர் அவரது திருமணத்தை கைவிடுவதாகவும், திருமண வயது வந்த பின்னரே சிறுமிக்கு திருமணம் செய்து வைப்போம் என்று உறுதி அளித்தனர். மேலும் இது பற்றி போலீசாரிடமும் எழுதி கொடுத்தனர். அதைத்தொடர்ந்து திருமண நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு விழாவுக்கு வந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Average Rating