திருப்பரங்குன்றம் அருகே குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கைத்தறி நகரை அடுத்துள்ள துர்கா காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது35), வெல்டிங் வேலைபார்த்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. முதல் மனைவிக்கு ஹரிணி (8) என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் பன்னீர் செல்வம் மாடேஸ்வரி (31) என்பவரை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வர்ஷினி (3) என்ற குழந்தை இருந்தது. மாடேஸ்வரி முதல் மனைவியின் குழந்தை ஹரிணியையும் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வீட்டின் அருகே உள்ள பானாங்குளம் கண்மாயில் மாடேஸ்வரி, வர்ஷினி ஆகியோர் பிணமாக மிதந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வர்ஷினியை கொலை செய்து மாடேஸ்வரி தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது ஹரிணியை காணவில்லை. எனவே அவரையும் மாடேஸ்வரி கொலை செய்திருக்கலாம் என்று கருதி கண்மாயில் ஹரிணியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாடேஸ்வரியின் கணவர் பன்னீர்செல்வத்தை காணவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடேஸ்வரி குழந்தையை கொன்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating