காதலன் ரூ.5 லட்சம் கேட்டதால் விஷம் குடித்து காதலி தற்கொலை!!
மதுரை மாவட்டம் சீலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் இந்துமதி. அதே பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவர் திருப்பூரில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.
அடிக்கடி ஊருக்கு வந்து செல்லும் தமிழரசனுக்கும், இந்துமதிக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது நெருங்கி பழகி வந்தனர். செல்போன் மூலமும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். தங்களது காதலை பற்றி பெற்றோரிடம் தெரிவித்தும் அவர்களும் மறுக்காமல் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்தனர்.
ஆனால் இந்துமதிக்கு திருமண வயது பூர்த்தியடையாததால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்துமதி திடீர் என விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இந்துமதி உயிர் இழந்தார்.
இதுகுறித்து இந்துமதியின் தந்தை கணேசன் எழுமலை போலீசில் புகார் செய்தார். அதில் தமிழரசன் தொடர்ந்து போனில் தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்ததால்தான் என் மகள் இந்துமதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating