மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளை பாதுகாக்கும் தனிநபர் மசோதாவுக்கு பாராளுமன்ற மேல்சபை ஒருமனதாக ஒப்புதல்!!
நாட்டில் வாழும் அனைத்து மூன்றாம் பாலினத்தவருக்கும் ஒருங்கிணைந்த தேசிய கொள்கையை கொண்டுவந்து அவர்களுக்கான அனைத்துவகை மேம்பாடு மற்றும் நலவாழ்வை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தி.மு.க. எம்.பி., திருச்சி சிவா பாராளுமன்ற மேல்சபையில் தனிநபர் மசோதா ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
‘மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைகள் மசோதா-2014’ என்ற அந்த மசோதாவின் மீது கடந்த மாதம் நடைபெற்ற விவாதத்தின்போது, சமூகத்தீண்டாமையால் பாதிக்கப்படும் மூன்றாம் பாலினத்தவரை சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுத்தாக வேண்டும் என கட்சி வேறுபாடுகளை மறந்து, அனைத்து எம்.பி.க்களும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பாராளுமன்ற மேல்சபையில் இன்று இந்த தனிநபர் மசோதா ஒருமனதாக நிறைவேறியது. இந்த மசோதாவினை அரசு ஏற்று சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்த காங்கிரஸ் எம்.பி., எம்.எஸ்.கில், உங்களையும், என்னையும்போல் மூன்றாம் பாலினத்தவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் நம்மைப்போன்ற சமஉரிமை தேவை. இந்த மசோதாவை சட்டமாக நிறைவேற்றினால், அந்த பெருமை இந்த புதிய அரசை சென்று சேரும் என்று தெரிவித்தார்.
இன்றைய விவாதத்தின் மீது பேசிய அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன், மூன்றாம் பாலினத்தவருக்கான பல்வேறு முன்னோடி நலத்திட்டங்களை தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியிருப்பதாகவும், இந்த திட்டங்களை இதர மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Average Rating