திருப்போரூரில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்: மணமகன் வீட்டார் அதிர்ச்சி!!
கேளம்பாக்கத்தை அடுத்த மாம்பாக்கத்தை சேர்ந்தவர் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் நாவலூர் அருகே உள்ள தாழம்பூரை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டருக்கும் இன்று திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.
இந்த திருமணத்திற்கு வனிதா சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. ஆனாலும் உறவினர் திருமண ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
நேற்று மாலை திருப்போரூர் வடக்கு மாடவீதியில் உள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போதும் வனிதா திருமணம் வேண்டாம் என்று கூறி உள்ளார். இதனை பெற்றோரும் உறவினர்களும் பெரிதாக எடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் மணவறையில் மணமகன் உட்கார்ந்து இருந்தார். மணகளை அழைத்து வருவதற்காக தோழிகளும், உறவினர்களும் மணமகள் அறைக்கு சென்றனர்.
ஆனால் அங்கிருந்து மணவறைக்கு வர வனிதா மறுத்துவிட்டார். இப்போது திருமணம் வேண்டாம் என்று கதறி அழுதார்.
இதுபற்றி தெரிந்ததும் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இரு வீட்டாரும் வனிதாவிடம் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் சமாதான பேச்சு நடத்தியும் ஏற்கவில்லை. திருமணம் வேண்டாம் என்று முடிவாக தெரிவித்தார்.
இதையடுத்து திருமணம் நின்றது. மணமக்களை வாழ்த்த வந்த இருவீட்டு உறவினர்களும், நண்பர்களும் சோகத்துடன் மண்டபத்தில் இருந்து வெளியேறினர்.
மணமகன் குறித்து எதுவும் வனிதா தவறாக சொல்லவில்லை. திருமணம் இப்போது வேண்டாம் என்று மட்டும் கூறி உள்ளார். அவரது இந்த முடிவுக்கு காரணம் என்ன? என்று தெரியவில்லை.
இதற்கிடையே மணமகள் வீட்டாரிடம் திருமண ஏற்பாட்டுக்கு ஆன செலவை கொடுக்குமாறு மணமகன் தரப்பினர் தெரிவித்தனர். அவர்களும் செலவு தொகையை கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இரு வீட்டாரும் திருமண மண்டபத்தை காலி செய்து கண்ணீருடன் புறப்பட்டு சென்றனர். மணமகனின் உறவினர்கள் சிலர் சென்னையில் உள்ள உறவுப் பெண்ணை திருமணத்திற்கு பேசி முடிக்க சென்றனர்.
திருமணம் முடிந்ததும் பரிமாற வைக்கப்பட்டு இருந்த உணவு பொருட்கள் மண்டபத்தில் அப்படியே இருந்தது.
இச்சம்பவத்தால் திருப்போரூர் பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.
Average Rating