தொண்டி அருகே 16 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, தொண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அதே ஊரைச் சேர்ந்த காளிதாஸ் மகன் பெருமாள் என்ற லெட்சுமணன் (வயது 27) என்பவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இன்று (26ந்தேதி) காலை இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது.
இதுகுறித்து ராமநாதபுரம் சைல்டு லைனுக்கு தகவல் கிடைத்ததன்பேரில் திருவாடானை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி, ஏட்டு அருள்மேரி, எஸ்.பி. பட்டினும் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செய்யது முஸ்தபா உசேன், ஏட்டு முத்துராமு ஆகியோர் அங்கு சென்று விசாரித்தனர்.
இதன்பின் குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமாகும். 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு தான் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்போது தான் அந்த பெண் உடல் ரீதியான தகுதி பெறுவார். இதுதவிர அரசின் சலுகைகளையும் பெற முடியும் என்று ஆலோசனை தெரிவித்தனர்.
அதன்பேரில் பெண்ணின் குடும்பத்தினர் தங்களது மகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
Average Rating