திருவனந்தபுரத்தில் மணமகன் விபத்தில் சிக்கியதால் ஆஸ்பத்திரியில் நடந்த திருமணம்!!
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்மனாபபுரத்தை சேர்ந்தவர் அப்துல்ரகுமான்(வயது 32). இவருக்கும் திருவனந்தபுரம் அருகே உள்ள பட்டம் பகுதியை சேர்ந்த ஹசீனா(26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. நேற்று திருமணம் நடத்தவும் நாள் குறிக்கப்பட்டிருந்தது. வெளி நாட்டில் வேலை பார்த்து வந்த அப்துல் ரகுமான் திருமணத்தையொட்டி சமீபத்தில் ஊர் திரும்பினார்.
இந்த நிலையில் கடந்த 1 வாரத்திற்கு முன்பு அப்துல்ரகுமான் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் அவரது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திருமண நாள் நெருங்கிய போதும் அப்துல்ரகுமான் முழுமையாக குணம் அடையாததால் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்ப முடியவில்லை. இதனால் திருமணத்தை குறிப்பிட்ட நாளில் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. திருமணத்தை தள்ளி வைக்கவும் பெரியவர்கள் தீர்மானித்தனர். ஆனால் மணமகள் ஹசீனாவோ குறிப்பிட்ட நாளில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரது விருப்பப்படி அரசு ஆஸ்பத்திரிலேயே திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெரியவர்கள் முன்னிலையில் டாக்டர்கள், நர்சுகள் நல்வாழ்த்துக்களுடன் அப்துல் ரகுமான்–ஹசீனா திருமணம் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் எளிமையாக நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு தனது கணவர் அருகில் இருந்து அவரை அக்கறையுடன் ஹசீனா கவனித்து வருகிறார்.
Average Rating