விழாக்களின்போது யானைகளை இம்சிக்காதீர்கள்: கேரள முதல் மந்திரிக்கு நடிகை பமீலா ஆண்டர்சன் வேண்டுகோள்!!
கேரள மாநிலத்தில் கோயில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் யானைகளின் அலங்கார அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். இன்னும் இரு நாட்களில் இங்குள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வடக்குநத்தன் கோயிலில் பூரம் திருவிழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவின்போதும் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், விழாக்களின்போது யானைகளை இம்சிக்காதீர்கள் என கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டிக்கு ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் இமெயில் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விலங்குகளை முறைப்படி நடத்த வேண்டும் என்று போராடிவரும் ‘பிட்டா’ அமைப்பை சேர்ந்தவரான பமீலா, யானைகளை இதுபோன்ற விழாக்களின்போது இம்சிப்பது தொடர்பாக மக்களின் கருத்து மாறி வருகின்றது. இந்நிலையில், நிஜ யானைகளுக்கு பதிலாக மூங்கில் மற்றும் காகிதக்கூழினால் செய்யப்பட்ட 30 செயற்கை யானைகளை தயாரித்து இதுபோன்ற அணிவகுப்பில் பங்கேற்க வையுங்கள்.
இதற்கு தேவையான செலவுகளை ஏற்றுக்கொள்ள நான் தயார். அந்தக் காட்சி காண்பவர்களின் கண்களுக்கு ரம்மியமாகவும், மனதுக்கு இதமாகவும் அமையும். மாறாக, யானைகளுக்கு விலங்கிட்டு அங்குசத்தின் முனையில் அடக்கி, மிரட்டி, சூடான தரையில் நடக்கவிட்டால் மக்களின் மனதில் விழாக்கால மகிழ்ச்சிக்கு மாறாக, துக்கமான உணர்வுகளே மேலோங்கி நிற்கும் என இமெயில் மூலம் அனுப்பியுள்ள தனது வேண்டுகோள் கடிதத்தில் பமீலா ஆண்டர்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Average Rating