டயானாவின் மரண விசாரணையில் திடீர் திருப்பம் பிரிட்டிஷ் முகவர்களின் சதிச்செயலென குற்றச்சாட்டு
மறைந்த வேல்ஸ் இளவரசி டயானா பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு பார்வையை மங்கச் செய்யும் மிகப் பிரகாசமான வெளிச்சமொன்று சுரங்கப்பாதையில் தெரிந்ததாக டயானாவின் மரண விசாரணையில் சாட்சியமளித்த நபர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். 1997 இல் பாரிஸில் இடம்பெற்ற கார் விபத்தில் டயானா அவரது நண்பர் டொடி பயட் மற்றும் கார்ச் சாரதி ஆகியோர் பலியாகினர். இச் சம்பவம் தொடர்பிலான மரண விசாரணையின் போது சாட்சியமளித்த பிராங்கொய்ஸ் லெவிஸ்ரெர் ஏனையவர்களை விட வித்தியாசமான முறையில் முக்கிய தகவலை வழங்கியுள்ளார். டயானா பயணம் செய்த காருக்கு முன்னால் மோட்டார் சைக்கிளொன்றில் இருவர் பயணித்ததாகவும் மிகப் பிரகாசமான வெளிச்சமொன்று தெரிந்ததைத் தொடர்ந்து டயானாவின் கார் விபத்துக்குள்ளானதாகவும் பின்னர் விபத்துக்குள்ளான நொருங்கிய காரை உற்றுப்பார்த்த மோட்டார் சைக்கிள் பயணியொருவர் வேலை முடிந்து விட்டது என்பதற்கான சைகையை மற்றவருக்கு வெளிப்படுத்தியதாகவும் லெவிஸ்ரெர் தெரிவித்துள்ளார்.
இளவரசர் பிலிப்பின் சதி முயற்சி காரணமாக பிரிட்டனைச் சேர்ந்த முகவர்களினால் இவ் வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாமென டயானாவின் நண்பர் பயட்டின் தந்தை முஹமட் அல் பயட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இச் சம்பவம் இடம்பெற்றபோது சுரங்கப்பாதையினூடாக தனது காரை செலுத்தி கொண்டிருந்ததாகவும் பின்னர் காரை நிறுத்தி காரின் பக்கக் கண்ணாடியின் வழியாக சம்பவத்தை அவதானித்ததாகவும் லெவிஸ்ரெர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரான்ஸ் பொலிஸாருக்கும் விசாரணை அதிகாரிகளுக்கும் இச் சம்பவத்தை ஏன் வித்தியாசமான முறையில் விபரித்தீர்களென லெவிஸ்ரெரிடம் கேட்கப்பட்டபோதுதான் கையொப்பமிட்ட அறிக்கையை வாசித்துப் பார்க்கவில்லையெனத் தெரிவித்துள்ளார்.
இரண்டு கார்கள் வேகமாக ஒன்றுடன் ஒன்று உரசியவாறு சென்றதை தாங்கள் பார்த்ததாக பிரான்ஸைச் சேர்ந்த 3 சாட்சியாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர்.