30 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து தவித்த காட்டுயானை: வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி மீட்டனர்!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குற்றியாம்சால் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை ஒன்று திடீர் என்று புகுந்தது. அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்த அந்த யானையை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அந்த யானையை பொதுமக்கள் வெடி வெடித்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. அந்த பகுதியிலேயே யானை தொடர்ந்து உலா வந்தது.
உடனே பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து அந்த யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த யானை மிரண்டு ஓடியபோது ஸ்டீபன் என்பவரின் வீட்டின் முன்பு இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்தது. 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்தது. கிணற்றில் விழுந்து தவித்த அந்த அந்த யானை பிளிறியது.
இதைத் தொடர்ந்து யானையை மீட்பதற்கு பொதுமக்களின் உதவியுடன் அந்த கிணற்றை பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொண்டு நிரப்பினர். சுமார் 2 மணி நேரம் போராடி வனத்துறையினர் அந்த யானையை கிணற்றில் இருந்து மீட்டனர். இதைத்தொடர்ந்து அந்த யானை சகதியுடன் காட்டுப்பகுதிக்குள் ஓடியது. அதன்பிறகே பொதுமக்களுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டது.
Average Rating