சீர்காழி அருகே பாழடைந்த பங்களாவில் பதுங்கி இருந்த கும்பல்: போலீசார் விசாரணை!!
சீர்காழி அடுத்த கொண்டல் அருகே குமரகுடி என்ற கிராமத்தின் ஒதுக்குபுறத்தில் பாழடைந்த நிலையில் பங்களா ஒன்று உள்ளது.
அப்பகுதியில் பெரும்பாலும் ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அப்பகுதிக்கு தொடர்பில்லாத மர்ம கும்பல் ஒன்று அந்த பாழடைந்த பங்களாவிற்கு வருவதும் போவதுமாக இருந்தது.
இந்த வழியாக தினமும் போகும் சிலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் போலீசார் 20 பேர் அந்த பங்களாவை சுற்றி வளைத்தனர். ஆனால் போலீசார் அங்கு வருவதை அறிந்த அந்த கும்பல் போலீசார் வருவதற்கு முன்னதாகவே அங்கிருந்து சென்று விட்டனர்.
பின்னர் போலீசார் பங்களாவிற்குள் சென்று பார்த்தனர். அங்கு அந்த மர்ம கும்பல் விட்டுச்சென்ற பைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை. வெறும் துணிகள் மட்டுமே இருந்துள்ளது. அந்த மர்ம கும்பல் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து கொள்ளிடம் போலீசார் மாறு வேடத்தில் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Average Rating