மதுரையில் மாயமான மீனாட்சியின் குழந்தை மீட்கப்பட்டதா? மரபணு சோதனை நடத்தப்பட்டு வருவதாக ஐகோர்ட்டில் தகவல்!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பொம்மனம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தினகரன். இவரது மனைவி மீனாட்சி. இவர் பிரசவத்திற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2013–ம் ஆண்டு ஜூலை மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சில மணி நேரத்தில் அந்த குழந்தை காணாமல் போய் விட்டது.
குழந்தையை கண்டு பிடித்து தரக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இந்த குழந்தை மீட்கப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் தெரிவித்தனர். மரபணு பரிசோதனை முடிவில் அந்த குழந்தை, மீனாட்சியின் குழந்தை இல்லை என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. மேற்பார்வையில் மீனாட்சியின் குழந்தையை கண்டு பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், ரவி ஆகியோரது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அழகுமணி ஆஜரானார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில், ‘‘புதிதாக ஒரு குழந்தையை மீட்டு இருப்பதாகவும், அது மீனாட்சியின் குழந்தை தானா? என்பதை கண்டறிய மரபணு சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும்’’ தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் வழக்கு விசாரணையை வருகிற ஜூலை மாதம் 13–ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் இந்த குழந்தை மீனாட்சியின் குழந்தைதானா? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.
“இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்”
Average Rating