திருநங்கை மீது ஆசிட் வீச்சு: கைதான வெள்ளிப்பட்டறை தொழிலாளி ஜெயிலில் அடைப்பு!!
சேலம் அல்லிக்குட்டையை சேர்ந்தவர் அபி (வயது 25). திருநங்கையான இவர் சேலம் மாவட்ட திருநங்கைகள் நல சங்கத்தில் பணியாற்றி வருகிறார். அபியும், அதே பகுதியை சேர்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி பிரபு (வயது 32) என்பவரும் நெருங்கி பழகி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு, அபியின் மீது ஆசிட்டை வீசினார். இதில் படுகாயம் அடைந்த அபி சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அறிந்த சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், பிரபுவை கைது செய்ய தனிப்படை அமைத்தார். இதில் துணை கமிஷனர் பாபு, அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்–இன்ஸ்பெக்டர்கள் அங்கப்பன், சத்தியமூர்த்தி, ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், ஜெயராமன், சேகர் மற்றும் வீராணம், அம்மாப்பேட்டை போலீசார் விசாரித்து தலைமறைவாக இருந்து பிரபுவை கைது செய்தனர்.
பின்னர் பிரபு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதில் அவர் கூறி இருப்பதாவது:–
வெள்ளிப்பட்டறை தொழில் செய்து வரும் எனக்கும், அபிக்கும் பழக்கம் இருந்தது. அபி அடிக்கடி பணம் கேட்பார், நானும் பணம் கொடுத்து உதவி வந்தேன். அவர் என்னிடம் வாங்கிய ரூ.1லட்சத்து 20 ஆயிரத்தை பல முறை கேட்டேன். ஆனால் அவர் திருப்பி தரவில்லை. இதனால் எங்களிடம் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் எனக்கு என் வீட்டில் பெண் பார்த்தனர். இதை அறிந்த அபி என்னிடம் தகராறு செய்தார்.
சம்பவத்தன்று அவர் எனது வீட்டிற்கு வந்து பணத்தையா என்னிடம் திருப்பி கேட்கிறாய்? உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன். கேவலப்படுத்தி விடுவேன் என கூறி மிரட்டினார். எப்படி திருமணம் செய்து கொள்கிறாய்? என பார்க்கிறேன் என்றும் மிரட்டினார்.
இதில் கோபம் அடைந்த நான், அபியை மிரட்ட ஆசிட் பாட்டிலை எடுத்து வீசி எறிந்தேன். அந்த பாட்டில் அவர் மீது பட்டு ஆசிட் கொட்டிவிட்டது.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating