கந்தரோடைப் பகுதியிலிருந்து பெருந்தொகையான ஆயூதங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம், வலிகாமம் கந்தரோடைப் பகுதியில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் நேற்று படையினர் மீட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இப்பகுதியில் தேடுதலை மேற்கொண்ட படையினர் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பெருந்தொகையான ஆயுதங்களை கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொன்றும் 23 கிலோ கிராம் நிறைகொண்ட 26 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த அதிசக்திவாய்ந்த ரி.என்.ரி. வெடிமருந்து, ஆறு தற்கொலை அங்கிகள், நவீன ரக தற்கொலை அங்கிகள் இரண்டு, இரண்டு கிலோ கிராம் எடைகொண்ட 12 பொதிகளில் அடைக்கப்பட்ட அதிசக்திவாய்ந்த சி.4 ரக வெடிமருந்து, ஒவ்வொன்றும் ஆயிரம் ரவைகள் கொண்ட ஐந்து பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த ரி.56 ரகத் துப்பாக்கிக்குரிய ரவைகள், இரண்டு கிலோ நிறைகொண்ட ஆறு கைக்குண்டுகள், செய்மதித் தொலைபேசி உட்பட 37 வகையான பெருந்தொகையான ஆயுத உபகரணங்களை இத்தேடுதல் நடவடிக்கையின் போது படையினர் மீட்டுள்ளனர். யாழ்.குடாநாட்டில் அண்மைக் காலமாக புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, நேற்று பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதக் குவியல் பல மடங்கு அதிகமானதெனவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.nationalsecurity.lk/fullnews.php?id=7945