உயிரை கையில் பிடித்தபடி இருந்தோம்: நேபாள நிலநடுக்கத்தில் உயிர் தப்பிய மதுரை மாணவி பேட்டி!!
மதுரை சூர்யா நகரை சேர்ந்த சித்த மருத்துவர் அப்துல் கரீம்–சமீமா ஆகியோரின் மகள் அனீஸ் பாத்திமா (வயது20), நேபாளத்தில் உள்ள நேபால் கன்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
அங்கு ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிர் தப்பிய அனீஸ் பாத்திமா தமிழக அரசின் உதவியுடன் சென்னை திரும்பினார். இன்று மதுரையில் உள்ள வீட்டிற்கு திரும்பிய அவர் நேபாள பூகம்பம் குறித்து கூறியதாவது:–
நான் தங்கியிருந்த விடுதி அறையில் லேசான அதிர்வு ஏற்பட்டது. இது எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை. முதல் முறை என்பதால் எங்களால் பூகம்பத்தை உணர முடியாமல் போய்விட்டது. அதன்பின்னர் தொடர்ந்து 20 முறை அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் விடுதி அறையை விட்டு வெளியே வந்தோம்.
30 கிலோமீட்டருக்கு அப்பால் மிகப்பெரிய அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டு திரளான மக்கள் இறந்ததை கேள்விப்பட்டு அதிர்ச்சிக்குள்ளானோம். நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் சொந்த நாடு திரும்ப முடிவு செய்தோம். ஆனால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பெற்றோரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்த சம்பவத்தால் எங்கள் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட 2 நாட்களும் உயிரை கையில் பிடித்தபடி இருந்தோம். இது மறக்க முடியாத சம்பவமாக மனதில் பதிந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating