தந்தை–உறவினர்களால் உயிருக்கு ஆபத்து: காதல் ஜோடி கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம்!!
சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள செட்டிசாவடி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகள் கவிதா (வயது 22). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார்.
இன்று காலை இவர் கலெக்டர் அலுவகத்துக்கு தனது காதலன் சபரிநாதனுடன் வந்து புகார் மனு கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:–
எனது பெயர் கவிதா, நான் சேலம் செட்டிச்சாவடி சிவா நகரில் வசித்து வருகிறேன். நான் தற்போது என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளேன். நான் எனது முறைப்பையன் சபரிநாதனை விரும்புகிறேன். நாங்கள் இருவரும் மேஜர், மற்றும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள்.
நான் எனது விருப்பத்தை எனது குடும்பத்தில் கூறினேன். அவர்கள் படிப்பு, சொத்து காரணமாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். எனது குடும்பத்தில் பொறுமையாக பேசி சம்மதம் வாங்கிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் சிறிதளவும் ஏற்க மறுத்தனர். மருந்து வாங்கி அனைவரும் குடித்து விடுவோம், உன்னையும் விடமாட்டோம் உனக்கும் மருந்து கொடுத்து கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.
நாங்கள் கூறும் பையனைத் தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினார்கள்.
படிப்பு இல்லாவிட்டாலும் எனக்கு பிடித்தவருடன் வாழ எனக்கு விருப்பம். வேறு ஒருவருடன் வாழ எனக்கு விருப்பம் இல்லை என்று தெளிவாக எனது குடும்பத்தில் கூறினேன். என்னை வீட்டில் அடிக்கவும் செய்தார்கள். நாட்கள் செல்ல செல்ல என் உயிருக்கே எங்கள் வீட்டில் கேரண்டி இல்லை என்ற பயம் ஏற்பட்டது. துயரம் தாங்காமல் நானே தற்கொலை செய்து விடுவேனோ என்று தோன்றியது.
ஆதலால் தான் நான் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தேன். நான் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டேன். எனது உயிருக்கோ, சபரி நாதன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கோ ஆபத்து ஏற்பட்டால் எனது குடும்பமே காரணம். நான் எனது முழு விருப்பத்துடன்தான் வீட்டை விட்டு வெளியேறினேன்.
எங்களது குடும்பத்தில் படிப்பு, கவுரவம் எதிர்பார்த்து மறுக்கிறார்கள், படிப்பு இல்லாவிட்டாலும் நான் சபரிநாதனுடன் மட்டுமே வாழ விரும்புகிறேன்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் கூறியிருந்தார்.
பின்னர் கவிதா நிருபர்களிடம் கூறியதாவது:–
எனது தந்தை மற்றும் உறவினர்கள் எங்கள் போட்டோக்களை வைத்து தேடுவதாகவும், பார்த்த இடத்தில் எங்களை கொன்று விடுதாகவும் தெரியவந்தது. இதனால் பயந்து போய் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு நாங்கள் வந்துள்ளோம்.
இவ்வாறு கவிதா கூறினார்.
Average Rating