பெண் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்ததாக புகார்: ஆத்தூர் துணை தாசில்தார்–சுகாதாரத்துறை இணை இயக்குனர் நேரில் விசாரணை!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் அழகுவேல் (வயது 34). பட்டறை தொழிலாளி. இவரது மனைவி சத்யா (30). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யா ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேசன் மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் கர்ப்பப்பை சுருங்கவில்லை. ரத்தப் போக்கும் அதிகமாக இருந்தது. இதனால் சத்யா உடலில் 5 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது. அப்படியும் ரத்தப்போக்கு நிற்கவில்லை. கர்ப்பப்பையும் சுருங்கவில்லை. அவரது வயிறு கர்ப்பிணி வயிறு போல வீக்கமாக காணப்பட்டது. இதனால் சத்யாவின் உயிருக்கு ஆபத்து என்றும், கர்ப்பப்பையை அகற்றினால் தான் அவரது உயிரை காப்பாற்ற முடியும் என்றும் டாக்டர்கள்–நர்சுகள் கூறினார்கள். இதனால் சத்யாவின் தாயார் கொடியரசியிடம் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கையெழுத்து பெற்று சத்யாவுக்கு கர்ப்பப்பையை அகற்றினர். அவர் உயிர் பிழைத்து கொண்டார்.
ஆனால் சத்யா கணவர் அழகுவேல் மற்றும் உறவினர்கள் ஆத்தூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு டாக்டர்கள் மீது சரமாரியாக புகார் கூறினார்கள். குழந்தையை வெளியில் எடுக்க ஆபரேசன் செய்த டாக்டர்கள் பஞ்சு மற்றும் கையுறை ஆகியவற்றை வயிற்றில் வைத்து தைத்து விட்டதாகவும் அதை மறைக்க மீண்டும் ஆபரேசன் செய்து கர்ப்பப்பையை அகற்றி பஞ்சு மற்றும் கையுறையை வெளியே எடுத்ததாகவும் சத்யாவின் கணவர் மற்றும் உறவினர்கள் புகார் கூறினார்கள். ஆபரேசன் செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்தப் புகார் குறித்து சத்யாவின் உறவினர்களிடம் துணை தாசில்தார் முருகையன் விசாரணை நடத்தினார். பின்னர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் நேரில் சென்று விசாரித்தார்.
இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் விஜயலட்சுமி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
பிரசவத்திற்குப்பிறகு கர்ப்பப்பை தானாக சுருங்கி விடும் தன்மை கொண்டது. சிலருக்கு ஒரு சில மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் ஏற்கனவே ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சத்யாவுக்கு கர்ப்பப்பை சுருங்காததால் அதை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கூறுவது போல் எந்த தவறும் நடக்கவில்லை. இருந்தாலும் அவர்களது புகார் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்படும். விசாரணையில் தவறு இருப்பது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating