குமரி மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த சேலம் தோட்டக்கலை துறை அதிகாரி ஓடும் பஸ்சில் மரணம்!!
சேலம் மாவட்டம் குளத்தூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). இவர் சேலத்தில் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அதிகாரிகள் உத்தரவுப்படி இவர் குமரி மாவட்டத்தில் பழத்தோட்டம் மற்றும் பேச்சிப்பாறையில் உள்ள தோட்டக்கலை துறை பழப்பண்ணைகளை ஆய்வு செய்வதற்காக சேலத்தில் இருந்து புறப்பட்டார்.
நேற்று சேலத்தில் இருந்து பஸ் மூலம் மதுரை வந்த அவர், அங்கிருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்சில் ஏறி குமரி மாவட்டம் வந்தார். இன்று காலை 10 மணியளவில் அவர் வந்த பஸ் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தை வந்தடைந்தது.
உடனே பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்றுவிட்டனர். ஆனால் அதிகாரி ரவிச்சந்திரன் மட்டும் பஸ்சில் இருந்து இறங்கவில்லை. இதனால் கண்டக்டர் அங்குச் சென்று அவரை எழுப்பினார். அப்போது ரவிச்சந்திரன் இருக்கையிலேயே மரணமடைந்து இருப்பது தெரிய வந்தது.
அவர் மரணமடைந்த தகவல் வடசேரி போலீசாருக்கு கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதிகாரி ரவிச்சந்திரன் மாரடைப்பால் மரணமடைந்தாரா? அல்லது வேறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் அவரது பிணம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரவிச்சந்திரன் மரணமடைந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாகர்கோவில் விரைந்து உள்ளனர்.
ரவிச்சந்திரனுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது மகள் சித்த மருத்துவம் 2–ம் ஆண்டு படித்து வருகிறார். மகன் 7–ம் வகுப்பு படித்து வருகிறான்.
Average Rating