மதுரையில் 3 குழந்தைகளை பிளேடால் அறுத்துக்கொல்ல முயன்ற தந்தை: போலீசார் விசாரணை!!
மதுரை மேலஆவணி மூல வீதியில் உள்ள ஒரு லாட்ஜின் அறையில் இருந்து இன்றுகாலை குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக லாட்ஜ் ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த போது 3 குழந்தைகள் உடலில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தைகளுடன் இருந்த நபர், அந்த குழந்தைகளை பிளேடால் கழுத்து உள்பட உடலின் பல இடங்களில் அறுத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்கள், திலகர் திடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
குழந்தைகளுடன் இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ் லைன் லட்சுமி நகர் 3–வது குறுக்குத் தெருவை சேர்ந்த சுந்தரலிங்க பெருமாள் சாமி(வயது41) என தெரியவந்தது.
இவரது மனைவி பெயர் திருமலைச் செல்வி. இவர்களது குழந்தைகளான அசின் (13), தினேஷ்ராஜ் (9), மேதினி ராஜேஸ்வரி (7) ஆகியோரை லாட்ஜில் வைத்து பிளேடால் அறுத்து கொல்ல முயன்றது தெரிய வந்தது. சுந்தரலிங்க பெருமாள்சாமியின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தன. எனவே அவர் சைக்கோவா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 குழந்தைகளை மதுரைக்கு அழைத்துவந்து லாட்ஜில் அடைத்து சுந்தரலிங்க பெருமாள் கொல்ல முயன்றது ஏன்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating