ஒருதலைக் காதலால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை!!
அரியலூர் மாவட்டம் உடையாம்பாளையம் தாலுகாவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சதீஷ்ராஜா(வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
ஜோதிபுரம் அய்யாசாமி தெருவில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். வழக்கம் போல் அனைத்து மாணவர்களும் கல்லூரிக்கு சென்று விட்டனர். சதீஷ்ராஜா மட்டும் வீட்டில் இருந்தார்.
திடீரென்று அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் சதீஷ்ராஜா தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சதீஷ் ராஜா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சதீஷ்ராஜாவின் நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் சதீஷ்ராஜா ஒரு பெண்ணுடன் அடிக்கடி பேசுவார். ஆனால் அந்த பெண் அவரது காதலை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சதீஷ்ராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனக்கூறினார்கள். மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது குறித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating