ஓடும் பேருந்தில் கற்பழிப்பு முயற்சி: எதிர்த்த 14 வயது சிறுமி பேருந்திலிருந்து தூக்கி வீசி கொலை – தாய் படுகாயம்!!
பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தை சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர், அருகிலுள்ள குருத்வாராவுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறினர்.
அப்போது பேருந்தில் பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் பேருந்தில் இருந்த ஆண் ஒருவர், 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதை சிறுமியின் தாய் தடுக்கவே, அந்த நபர் சிறுமியின் தாயை அடித்து உதைத்துள்ளார். தங்களுக்கு நடக்கும் கொடுமையை தடுத்து நிறுத்துமாறு கண்டக்டரிடம் தாய் கதறி அழ, கண்டக்டரோ சிறுமியை காப்பாற்ற முயலாமல், அவரும் சில்மிஷம் செய்த நபருடன் சேர்ந்து கொண்டு, சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.
ஓடும் பேருந்திலேயே இச்சம்பவம் நடந்துகொண்டிருக்க, பரிதவித்த பெண்ணின் தாய் டிரைவரிடம் சென்று பேருந்தை நிறுத்துமாறு முறையிட்டார். ஆனால் கொடூர மனம் கொண்ட டிரைவரும் தாயின் பரிதவிப்பை கண்டுகொள்ளாமல் பேருந்தை தொடர்ந்து ஓட்டிச்சென்றார். இந்த நிலையில் கண்டக்டர் உள்பட அந்த கும்பல் சிறுமியையும், தாயையும் பேருந்தில் இருந்து தூக்கி வெளியே வீசியது.
இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி மரணம் அடைந்தாள். தாய் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 12 மணி நேரம் கழித்து பேருந்தை மட்டும் பறிமுதல் செய்தனர். அதன் நடத்துனரையும், டிரைவரையும் தேடிவருவதாக கூறியுள்ள போலீஸ் அதிகாரி ஜதீந்தர் கெய்ரா, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
Average Rating