பெங்களூரு ஏரியில் ரசாயன கழிவுகளால் கரைபுரளும் வெள்ளை நுரை: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!!
பெங்களூரு நகரில் கடந்த பல ஆண்டுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. நாளடைவில் பெங்களூரு நகரின் வளர்ச்சி, ஆக்கிரமிப்புகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஏரிகள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன.
தற்போது பெங்களூருவில் 60-க்கும் குறைவான ஏரிகளே உள்ளன. அவற்றில் ஒன்று வர்த்தூர் ஏரி ஆகும். அந்த ஏரி 180 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி முறையாக பராமரிக்கப்பட்டு வந்தாலும், பாதாள சாக்கடை கழிவுநீர் மற்றும் பிற தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் ஏரியில் கலக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ஏரியில் ரசாயனம் கலப்பதால், பிற பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் ஏரியில் வெள்ளை நுரையாக மாறி கரைபுரண்டு ஓடுகிறது.
இவ்வாறு ஓடும் வெள்ளை நுரை வர்த்தூர் ஏரியில் உள்ள தடுப்பு சுவரில் மோதி மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இதனால் ஏரி முழுவதும் வெள்ளை நுரையாக காட்சி அளிக்கிறது. அத்துடன் வெள்ளை நுரை காற்றில் பறந்து அந்த வழியாக செல்லும் சாலைக்கே வந்து விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீதும் வெள்ளை நுரை போய் விழுகிறது. அதனால் தங்களது வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
மேலும் காற்றில் பறக்கும் நுரை வர்த்தூர் ஏரி அருகே இருக்கும் குடியிருப்பு வீடுகளுக்கு மேல் போய் விழுகிறது. அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மீதும் நுரை விழுவதால், துர்நாற்றம் தாங்க முடியாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் ரசாயனம் கலந்த வெள்ளை நுரை பொதுமக்கள் மீது காற்றில் பறந்து விழுவதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “வர்த்தூர் ஏரியில் பாதாள சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. இதுதவிர அமிலத்தன்மை கலந்த ரசாயன கழிவுகளும் ஏரியில் கலக்கிறது. இதன் காரணமாக தான் ஏரியில் ஓடும் தண்ணீர் வெள்ளை நுரையாக மாறி விடுகிறது. மேலும் ஏரியில் மலை போல் குவிந்து நிற்கும் வெள்ளை நுரை காற்றில் பறந்துவந்து வீடுகள் மீதும் விழுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்கள்.
Average Rating