கொச்சி வந்த கப்பலில் நியுயார்க் நகர குப்பைகள்: சுங்க இலாகாவினர் அதிர்ச்சி
கொச்சியை சேர்ந்த நிறுவனம் ஒன்று அமெரிக்காவின் நியுயார்க்கில் இருந்து பழைய காகிதங்களை இறக்குமதி செய்தது. இந்த காகிதங்கள் அடங்கிய 4 கண்டெய்னர்கள், ஒரு கப்பல் மூலம் கொச்சி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. கடந்த 2 வாரத்துக்கு முன் வந்த அந்த கண்டெய்னர்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவற்றில் பழைய காகிதத்துடன், பிளாஸ்டிக் பொருட்கள், உணவுக் கழிவுகள், கழித்து போட்ட கம்ப்யுட்டர் பாகங்கள், கண்ணாடி துண்டுகள் போன்ற 60 டன் குப்பைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த குப்பைகள் நியுயார்க் நகராட்சியை சேர்ந்தவை ஆகும். இதுபற்றி விசாரணை நடத்த 4 பேர் கொண்ட உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே சர்ச்சைக்குரிய இந்த கண்டெய்னர்களை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேரள மாநில சுற்றுச்சூழல் வாரிய தலைவர் ஜி.ராஜ்மோகன் கூறி உள்ளார்.