கோவில் கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த கும்பல்: பேஸ்புக்கில் படம் வெளியானதால் பரபரப்பு!!
குற்றங்களை கண்டுபிடிப்பதிலும், அவற்றை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதிலும் சமூக வலைத்தளங்கள், சிசிடிவி கேமராக்கள், செல்போன்கள் ஆகியவை தற்காலத்தில் பெரும் பங்காற்றுகின்றன. அந்த வகையில் ஒரு குற்றச்சம்பவத்தை தற்செயலாக ஒரு இளைஞர் அவரது செல்போனில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு காலத்தில் பூட்டியுள்ள வீட்டை திருடர்கள் கன்னம் வைத்து திருடும் நிலை மாறி, தற்போது ஆள் இருக்கும் வீட்டிலேயே திருடுவது, சாலையில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பது, கும்பாபிஷேகம், தீமிதி போன்ற பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் நகை திருடுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
நாகை மாவட்டம் குத்தாலம் வள்ளுவர் தெருவில் அமைந்துள்ள கற்பகவிநாயகர், மன்மதீஸ்வரசுவாமி கோவில்களில் கடந்த ஏப்ரல் 10–ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற போது ஒரு வயதான மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலியை 4 பெண்கள் அடங்கிய திருட்டுக்கும்பல் மிக சாதுர்யமாக பறித்துச்செல்லும் காட்சி புகைப்படத்தில் துல்லியமாக பதிவாகியுள்ளது.
பக்தர்கள் சுமார் 100 பேர் மட்டுமே கலந்துகொண்ட அந்த கும்பாபிஷேக விழாவில் சரியாக கும்பத்தில் அபிஷேகம் செய்யப்படும் நேரத்தில் அந்த மூதாட்டியை நான்கு பெண்களும் சூழ்ந்துகொண்டு அவருக்கு நெரிசலை ஏற்படுத்துகின்றனர். அதில் நிலைதடுமாறிய மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருக்கும் செயினின் கொக்கியை ஒரு பெண்மணி தனது பல்லால் விலக்கி, அந்த செயினை பறித்துள்ளார். குற்றம் நடைபெற்று மூன்று வாரங்கள் கடந்த நிலையில், தற்போது அந்த புகைப்படம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அக்கும்பல் இனியேனும் பிடிபடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Average Rating