கனடாவில் தீ விபத்து புரளி: நடிகர் விஜயகாந்த் ஓட்டலை விட்டு வெளியே ஓடிவந்தார், 3 மணி நேரம் தவிப்பு
கனடா ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் விஜயகாந்த் தீ விபத்து புரளி காரணமாக ஓட்டலை விட்டு வெளியே ஓடி வந்தார். அவரும், அவரது மனைவியும் 3 மணி நேரம் ஓட்டலுக்கு வெளியிலேயே நின்று தவித்தனர். நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் `அரசாங்கம்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு கனடாவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு விஜயகாந்த் சம்பந்தப்பட்ட ஒரு பயங்கரமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் விஜயகாந்துடன் கதாநாயகிகள் நவ்நீத்கோர், ஷெரின்பிரின்ட்டோ, நடிகர் மனோஜ் கே.ஜெயன் ஆகியோரும் பங்கு பெற்றனர். நள்ளிரவு 12.30 மணிக்கே படப்பிடிப்பு முடிவடைந்தது. விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் அவர்கள் தங்கியிருந்த ஹில்டன் இன்டர்நேஷனல் ஓட்டலுக்கு திரும்பினார்கள். அதிகாலை 4.30 மணியளவில் அந்த ஓட்டலின் பல பகுதிகளில் இருந்து திடீரென அபாய எச்சரிக்கை மணி ஒலித்தது. ஓட்டலில் தீ பிடித்துவிட்டதாக கூறப்பட்டது. ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் பயந்து அலறியடித்தபடி மனைவி, குழந்தைகளுடன் வெளியே ஓடினார்கள்.
3 மணி நேரம் தவிப்பு
விஜயகாந்தும், மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் பாஸ்போர்ட்டுகளை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார். அந்த வட்டாரம் முழுவதும் ஒரே பரபரப்பாக இருந்தது. 20 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் ஓட்டலுக்குள் சென்று பார்த்த போது லிப்டுகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக எச்சரிக்கை மணி ஒலித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விஜயகாந்த், அவரது குடும்பத்தினர் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் 3 மணி நேரமாக ஓட்டலுக்கு வெளியிலேயே நின்று தவித்தபடி இருந்தனர். தீ விபத்து இல்லை என்று தெரிந்த பின்னரே அனைவரும் ஓட்டல் அறைகளுக்கு திரும்பினார்கள்.
22-ந் தேதி திரும்புகிறார்
அரசாங்கம் படத்தின் படப்பிடிப்பு 21-ந் தேதியுடன் கனடாவில் முடிவடைகிறது. 22-ந் தேதி விஜயகாந்த் சென்னை திரும்புகிறார்.