பணத்தை கூட எண்ணத் தெரியாதவனுக்கு கழுத்தை நீட்டுவதா?: திருமண மேடையில் மணமகனை ஓடவிட்ட பட்டதாரி பெண்!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பால்லியா மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும், பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்ற வாலிபருக்கும் திருமணம் செய்துவைக்க பெரியோர்கள் நிச்சயித்தனர். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை பால்லியா மாவட்டத்தின் பன்ஸ்டீ பகுதியில் உற்றார், உறவினர் முன்னிலையில் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் கல்யாண வீடு களைகட்டியது.
தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் சரியாக எழுதப்படிக்க தெரியாதவர் என்பதை அறிந்த மணமகள் பதறிப் போனார். இது தொடர்பாக தனது பெற்றோரிடம் எடுத்துக்கூறியபோது அவர்கள் மாப்பிள்ளை வீட்டாரை தொடர்பு கொண்டு இந்த தகவல் உண்மைதானா? என்று விசாரித்தனர்.
மாப்பிள்ளை வீட்டார் மழுப்பலாக பதில் கூறி விஷயத்தை மறைக்க முயற்சித்தனர். இப்படி பேசினால் நியாயம் பிறக்காது என்று முடிவுசெய்த மணமகள், மாப்பிள்ளையிடம் கத்தையாக ரூபாய் நோட்டுகளை அள்ளித்தந்து. ‘இதில் எவ்வளவு பணம் இருக்கின்றது என எண்ணிச் சொல்லுங்கள்’ என்று கூறினார்.
மணமகனும், விரல்களில் எச்சில் தொட்டு, எச்சில் தொட்டு, ரூபாய் நோட்டுகளை எண்ணி முடித்து, ஒவ்வொரு முறையும் தப்பும் தவறுமாக தொகையை மாற்றி, மாற்றி கூறினார். இதையடுத்து, கழுத்தில் இருந்த மணமாலையை கழற்றி கீழே எறிந்துவிட்டு, மாப்பிள்ளைக்கு மணமகள் ‘கெட் அவுட்’ கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் பெண் வீட்டாருடன் தகராறு செய்தனர். இந்த தகராறில் தலையிட்ட உள்ளூர் பஞ்சாயத்தார், மணமகன் சரியாக எழுதப் படிக்க தெரியாதவர் என்ற உண்மையை மறைத்து ஒரு பட்டதாரி பெண்ணை திருமணம் செய்ய முயன்றது உங்கள் குற்றம். எனவே, பிரச்சனையை பெரிதுபண்ணாமல் மரியாதையாக இங்கிருந்து போய் விடுங்கள் என அவர்களை எச்சரித்து பீகாருக்கு விரட்டியனுப்பினர்.
Average Rating