செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் நடிகை நீத்து அகர்வால் ஜாமீன் மனு தள்ளுபடி!!
ஆந்திராவில் செம்மரக் கட்டைகளை வெட்டி கடத்தியதாக கைதான கூலி தொழிலாளர்களிடம நடத்திய விசாரணை மூலம் செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டு உள்ள முக்கிய பிரமுகர்கள் பட்டியலை போலீசார் சேகரித்தனர்.
இதையடுத்து கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், படத் தயாரிப்பாளருமான மஸ்தான்வலி என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் தனது படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை நீத்துஅகர்வால் மூலம் கடத்தல்காரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்தது.
மஸ்தான்வலியுடன் மனைவி போல் குடித்தனம் நடத்தி வந்த நீத்துஅகர்வாலை ஐதராபாத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் நந்தியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை போலீசார் 2 நாள் காவில் எடுத்து விசாரணை நடத்.தினர். அதில் மஸ்தான்வலியுடன் உள்ள தொடர்பு கடத்தல்காரர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்த விவரம் போன்றவைகள் பற்றி விசாரித்தனர்.
போலீஸ் காவல் முடிந்ததையடுத்து நீத்துஅகர்வால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி நீத்துஅகர்வால் ஆலகட்டா ஜுடீசியல் முதல்வகுப்பு கோர்ட்டில் மனு செய்தார். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. நீத்து அகர்வால் சார்பில் அவரது வக்கீல் சிவபிரசாத்ராவ் ஆஜராகி வாதாடினார்.
போலீஸ் விசாரணை முடிந்து விட்டதால் நீத்து அகர்வாலுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் கோரினார். ஆனால் இதற்கு அரசுதரப்பு வக்கீல் பாலுநாயக் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதிடும் போது, ‘‘நீத்து அகர்வாலிடம் விசாரணை இன்னும் முடியவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை இன்னும் கைது செய்ய வேண்டியது உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணைக்கு பங்கம் ஏற்படும்’’ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சோமசேகர் நடிகை நீத்துஅகர்வால் ஜாமீன் மனு நிராகரித்து உத்தரவிட்டார்.
Average Rating