வறுமையின் கொடுமையால் ரூ.10 ஆயிரத்துக்கு ஆண் குழந்தையை விற்க முயன்ற வட மாநில வாலிபர்!!
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கேரள மாநிலம் கண்ணூர் கண்ணாடிபறம்பு என்ற இடத்தில் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
கணவனும் மனைவியும் கல் உடைக்கும் தொழில் செய்வது மூலம் குறைந்த வருமானமே கிடைத்ததால் தங்கள் 3 குழந்தைகளை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர்.
மேலும் கடந்த சில மாதங்களாக சரிவர வேலை கிடைக்காததால் வருமானமின்றி அவதிப்பட்டு வந்ததால், பிறந்து 28 நாட்களே ஆன தங்களது ஆண் குழந்தையை கையாரழம் என்ற இடத்தை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு ரூ.10 ஆயிரம் விலை பேசி விற்பதற்கு ராஜேஷ் முயற்சித்தார்.
மனைவியிடம் குழந்தையை கேட்டபோது அவர் கொடுக்க மறுத்தார். குழந்தையை தர மாட்டேன் என அலறித்துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்து விசாரித்தபோது, குழந்தையை விலைபேசி விற்க முயற்சி செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக பொது மக்கள் போலீசில் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தி, குழந்தை விற்பனையை தடுத்து நிறுத்தினர்.
இப்பிரச்சினையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தரகராக இருந்து விலை பேசியதாக கூறப்படுகிறது. போலீஸ் வருவதை அறிந்த அவர் அங்கிருந்து தப்பிஓடி விட்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய அந்த தரகரை தேடி வருகிறார்கள்.
Average Rating